தமிழ்நாடு

இரவு வயலுக்கு சென்ற விவசாயி : காலையில் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

webteam

தஞ்சையில் இரவு வயலுக்கு தண்ணீர் திறந்துவிடச் சென்ற விவசாயி காலையில் வெட்டப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியத்திற்குட்பட்ட சங்கரநாதர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமேனி (61). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். திருமேனி அருகில் இருக்கும் தனது வயலுக்கு தண்ணீர் திறந்துவிட செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற திருமேனி, விடிந்தும் வீட்டிற்கு திரும்பவில்லை.

இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்தபோது, திருமேனி கழுத்து மற்றும் கைகளில் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பாப்பாநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.