தமிழ்நாடு

டிராக்டர் கடனை கேட்டு வங்கி ஊழியர்கள் தாக்குதல்: விவசாயி மரணம்

webteam

திருவண்ணாமலை மாவட்டம் போந்தை கிராமத்தில் டிராக்டர் கடனைக் கேட்டு எஸ்பிஐ வங்கியைச் சேர்ந்த ஊழியர்கள் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டம் போந்தை கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்ற விவசாயி, சாத்தனூர் எஸ்பிஐ வங்கிக் கிளையில் 4.5 லட்சம் ரூபாய் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். அதில் 2 லட்சம் ரூபாய் கட்டியதுபோக மீதமுள்ள இரண்டரை லட்சம் ரூபாய் கடனை நீண்ட காலமாக திருப்பி செலுத்தவில்லை என்று கூறி வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அந்த வங்கியைச் சேர்ந்த கடன் வசூலிக்கும் நபர்கள் 2 பேர் விவசாயின் வீட்டிற்குச் சென்று டிராக்டரை பறிமுதல் செய்ய முயற்சித்தனர். வங்கி ஊழியர்கள் என்பதற்கு எந்த விதமான சான்றையும் அளிக்கவில்லை என்று கூறி விவசாயி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, அவர்கள் தாக்கியதில் விவசாயி மயக்கமடைந்து விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.