தமிழ்நாடு

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி

webteam

ராசிபுரம் அருகே தன்னை கடித்த பாம்பைக் கொன்று கையில் எடுத்துக்கொண்டு விவசாயி ஒருவர் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் ராமசாமி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவரை கட்டுவீரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் காயமடைந்த அவர், பாம்பை விடாமல் துரத்திசென்று அடித்து கொன்றுள்ளார்.

பின்னர் இறந்த பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். இதனைப்பார்த்த மற்ற நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்ததால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.