தமிழ்நாடு

வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்த கொழிசாலை மீன்கள் - வேதனையின் மீனவர்கள்

webteam

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் டன் கணக்கில் குவிந்த கொழிசாளை மீன்கள் வரத்து அதிகரிப்பாலும் வியாபாரிகள் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் மீன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுமார் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலும் ஏற்றுமதி ரக மீன்களான கணவாய், இரால், கிளிமீன் போன்ற மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது கணவாய், இரால் போன்ற மீன்கள் சீசன் இல்லாத நிலையில் கொழிசாளை, நாக்கண்டம் போன்ற மீன்களை அதிக அளவில் பிடித்து வருகின்றனர். இன்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பிய விசைப் படகுகளில் டன் கணக்கில் கொழிசாளை மீன்களை விற்பனைக்காக துறைமுகத்தில் மலைபோல் குவித்து வைத்திருந்தனர்.

ஆனால், வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், சாதாரணமாக 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகும் கொழிசாளை மீன் 20 ரூபாய்க்கு விலை சரிந்து கோழி தீவனத்திற்காக விற்பனை செய்யப்படுகிறது.