தமிழ்நாடு

“ஃபானி புயல் தமிழக கரையைக் கடக்காது” - இந்திய வானிலை மையம்

Rasus

தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஃபானி புயல் கரையைக் கடக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயலானது நாளை அதிதீவிர புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வடமேற்கு திசையை நோக்கி நகரும் அதிதீவிர ஃபானி புயல், மே 1-ஆம் தேதிக்கு பின் தனது பாதையை மாற்றி வடகிழக்கு திசையை நோக்கி பயணிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஃபானி புயலானது தமிழகம் மற்றும் ஆந்திராவில் கரையைக் கடக்காது எனத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஒடிசாவில் புயல் கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

இதனிடையே புயல் நிலவரம் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான ஏற்பாடுகளை செய்ய அமைச்சரவை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.