குழந்தைகளின் கண் முன்னே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னாலம்பாடி ஊராட்சியில் வசித்து வருபவர் ரவி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், இரண்டாவதாக அருணா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், அருணா ரவி தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட தகராறு காரணமாக அருணா தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து தன் பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இன்று மீண்டும் சின்னாலம்பாடி கிராமத்தில் உள்ள கணவர் ரவி வீட்டிற்குச் செல்ல இருந்தார்.
ஆனால் ஊருக்குச் செல்வதற்கு முன்பு சாலவாக்கம் காவல் நிலையத்தில், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் தனது கணவர் ரவியும் அவருடைய முதல் மனைவியும்தான் காரணமென எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துவிட்டு தன் உறவினர்கள் மற்றும் பிள்ளைகளுடன் கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
ஆப்போது, காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ரவி, கையில் அரிவாளுடன் தன் பிள்ளைகளின் எதிரே கண்மூடித்தனமாக தனது மனைவி அருணாவை வெட்ட முயற்சித்திருக்கிறார். இதில் அருணாவிற்கும் அவரது சகோதரருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனிடைய ரவி, தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் உதவியாளர் எனக்கூறி பல இடங்களில் தொடர்ச்சியாக மோசடி செய்து வருவதாகவும் அருணா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட காவல் துறையில் புகார் அளித்தும் காவலர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் அளிக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உடனடியாக இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.