தமிழ்நாடு

கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

webteam

ஆரோவில் பகுதியில் சம்பத் என்பவரிடம் இருந்து கட்டுக்கட்டாக கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் ஒட்டிய பகுதி இரும்பை கிராமம். இரும்பை கோயில் அருகே சஞ்சீவி நகரை சேர்ந்த சேகர் என்பவர் சிற்பக்கூடம் நடத்திவருகிறார். இங்கு விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார், வேலூர் மாவட்ட தனிப்படை போலீசார் இணைந்து அதிரடியாக நுழைந்தனர். அப்போது உள்ளே பதுங்கியிருந்த வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரியைச் சேர்ந்த சம்பத் என்பவரை பிடித்து அவர்கள் சோதனை நடத்தினர். அப்போது சம்பத் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக 1 லட்சத்து 64 ஆயிரம் பணம் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏலகிரியைச் சேர்ந்த தொழிலதிபர் அறிவுச்செல்வன் என்பவரை மிரட்டி கடத்திச் சென்று அவரிடம் 50 லட்சம் கேட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் இவர் என்பது தெரியவந்தது. இவர் மீது நிறைய வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைதான சம்பத்திடம் கள்ளநோட்டு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.