ராமர் கோவில்
ராமர் கோவில் PT
தமிழ்நாடு

Fact Check: உண்மையில் ராமர் பிரதிஷ்டை சிறப்பு பூஜைக்கு மறுப்பு வழங்கப்பட்டதா? நடந்தது என்ன?

Rishan Vengai

அயோத்தி ராமர் கோவிலில் நாளை கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சியை சிறப்பிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், உச்சநீதிமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் என பல்வேறு துறையைச் சார்ந்த முக்கியஸ்தர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள மக்களும் பெருமளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான் நாளை அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும் அதேவேளையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடத்துவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதாக பொய்யான தகவல் பரவியது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் தளத்தில் சலசலப்புகள் ஏற்பட்டன.

இது குறித்த விவாதங்கள் அதிகரித்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் தனித்தனியே விளக்கம் கொடுக்கப்பட்டது. கண்டனம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பொய்யான செய்தி பரப்பிய நாளிதழ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிக்கையில் தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவானது உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கியுள்ளது.

சிறப்பு பூஜைக்கு தடைவிதிக்கப்பட்டதா? உண்மை நிலை என்ன?

தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பு குழுவானது (TN Fact Check) தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி விளக்கமளித்துள்ளனர்.

சிறப்பு பூஜை

அவர்களுடைய பதிவில், “அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ்நாட்டு கோவில்களில் இராமர் பெயரில் அன்னதானம் நடத்த அரசு தடை விதித்துள்ளதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அன்னதானம் வழங்குவதற்காக பணம் செலுத்தி முன்பதிவு செய்யப்பட்ட பற்றுச்சீட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டு அன்னதானத்திற்கு அனுமதி வழங்கிய பற்றுச்சீட்டையும் இணைத்துள்ளது.

சிறப்பு பூஜை

மேலும், “உரிய அனுமதியின்றி அல்லது தக்க ஆவணங்களின்றி அன்னதானம் மற்றும் இதர நிகழ்வுகள் நடத்துவதற்கு முயற்சி செய்தவர்களுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி மறுத்திறுக்கிறது” எனவும் விளக்கப்பட்டுள்ளது.