தமிழ்நாடு

'வெடிக்கச் செய்வது வீரம் அல்ல... படிப்பு மூலம் பகுத்தறிவை தேடு..' காவல் ஆணையரின் கவிதை

webteam

வெடிக்கச் செய்வது வீரம் அல்ல... வெடிப்பு மூலம் வெறுப்பைத் தான் பெற முடியும்.. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எழுதி வெளியிட்டுள்ள கவிதை பலரது மத்தியிலும் பகிரப்பட்டு வருகிறது.

கோவையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அதிகாலையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இது தொடர்பாக தொடக்கத்தில் மாநில காவல்துறை அதிகாரிகளும், மாநகர காவல் துறையினரும் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து ஆறு பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தற்போது என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் பலதரப்பட்டோர் மத்தியிலும் பகிரப்பட்டு வரும் சூழலில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 'மதம்' Vs மதம் என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். மத வெறியால் ஏற்படும் விளைவுகள், படிப்பு மூலம் பகுத்தறிவை தேடு, இறைவன் பெயரில் எதுவும் செய்வோம் என்பது மூடத்தனம் உள்ளிட்ட பல்வேறு சிந்தனைகளை விதைக்கும் வகையில் ஒரு கவிதையை அவர் எழுதியுள்ளார்.

மாநகர காவல் ஆணையர் எழுதியுள்ள இந்த கவிதை காவல் துறையினர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வாசிக்கும் பழக்கம் கொண்டவர். வீதி தோறும் நூலகம், ஆட்டோ நூலகம் என வாசிப்பு தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகளை அவர் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.