நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்று விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததாக அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா கூறியிருக்கிறார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, “புத்தக விழாவிற்கு பல அழுத்தங்கள் வந்து, ஜனநாயக ரீதியாக செயல்படாத கோவத்தில்தான் நான் மேடையில் பேசினேன். 24 நிமிடம் பேசினேன். எந்த பேப்பரும் என்னிடம் இல்லை. மனதில் இருந்ததை பேசிவிட்டு நான் வந்துவிட்டேன்.
என்று திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ராஜா தன் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் ஒரு பேட்டி அளித்தாரோ அன்றிலிருந்தே திமுக என்னை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
புத்தக வெளியீட்டு விழாவை எளிமையான விழாவாக கடந்து போயிருக்கலாம். புத்தக வெளியீட்டு விழாவில் எல்லாம் ஒரு கூட்டணி உருவாகும் என்றால், அரசியலுக்கு புதிதாக வந்தவர்கள் கூட ‘முதிர்ச்சியற்ற தன்மை’ என கடந்து சென்றுவிடுவார்கள்.
திருவண்ணாமலையில் அமைச்சர் வேலுவைச் சந்தித்தபோது, நீங்கள் சென்றால் கூட்டணிக்கே பிரச்னை ஆகிவிடும்போல் தெரிகிறது. நீங்கள் செல்லாதீர்கள் என்றார். எ.வ. வேலுவின் திருமாவளவன் உள்வாங்குகிறார். பின் என் கருத்தையும் உள்வாங்குகிறார். ஊடகங்கள் அவரை (திருமாவளவன்) மட்டுமே டார்கெட் செய்தவாறு இருக்கிறது. அவரது தலைமையை நோக்கி டார்கெட் செய்தவாறே இருக்கிறது.
நான் அவரிடம் இருந்து எங்கு முரண்படுகிறேன் என்றால், நம்மிடம் உண்மையாக ஒரு விஷயம் இருக்கிறது. இந்த புத்தகத்தை 18 மாதங்களாக கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளோம். விஜய் வரும்போதும் நீங்கள் வருவதாக சொல்லிவிட்டீர்கள். அவருடைய அரசியல் என்பது அவருடைய கொள்கை. சமீபத்தில் கூட ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவிடத்திற்கே சென்றார். அது சாரணமான ஒன்றாகத்தானே பார்க்கப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லிவிட்டார் புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்ல வேண்டாம் என எ.வ. வேலு, திருமாவளவனிடம் சொன்னார். இந்த புத்தகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டபோது அவரும் நானும் பல ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளோம்.
உங்களுக்கு திருமணத்திற்கு, உங்களது தந்தையை யாராவது வர வேண்டாம் என சொன்னால் அவர்கள் மீது உங்களது கோபம் திரும்பாதா?” எனத் தெரிவித்துள்ளார்.