தமிழ்நாடு

``நான் யாரை கண்டும் ஓடி ஒளிய போவது கிடையாது”-தேர்தல் பரப்புரையில் ராஜேந்திர பாலாஜி பேச்சு

நிவேதா ஜெகராஜா

சிவகாசிக்கு மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டம், இன்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, “எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சிக்காலத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சிவகாசிக்கு, பல கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கியவர் இ.பி.எஸ். குறிப்பாக பட்டாசு தொழிலை பாதுகாத்து, பட்டாசு தொழிலுக்கு உயிர் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த உண்மைகளையெல்லாம் சொல்லி, அடுக்கடுக்கான அதிமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம். சிவகாசி மட்டுமன்றி, அதிமுக அனைத்து மாநகராட்சி நகராட்சியிலும் வெற்றி பெற வேண்டும். இன்றைய நிலைமை மாறவேண்டும் என்றால் அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகவே உள்ளனர். நான் யாரைக் கண்டும் ஓடி ஒளிய போவது கிடையாது. பிரச்னை என்றால் நான் ஓடோடி வருவேன்” என்றார்.

- செந்தில்குமார்