evks elangovan
evks elangovan pt desk
தமிழ்நாடு

“பச்சோந்தி போல் மாறிக்கொண்டே இருக்கக் கூடிய நபர், அண்ணாமலை” - EVKS இளங்கோவன் கடும் விமர்சனம்

webteam

ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது, “மணிப்பூரில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டும், பெண்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இவற்றை பிரதமர் மோடி பார்க்காமல் வெளிநாட்டிற்குச் சென்று அங்குள்ள அதிபர்களை சந்திக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறாமல் வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதிலேயே பொழுதை கழிக்கின்றார். மோடியின் அரசு தூக்கி எறியப்பட வேண்டிய அரசு.

அண்ணாமலை யாத்திரை...

முதல்வர் கூறியது போல் அண்ணாமலையின் யாத்திரை, பாவ யாத்திரை தான். ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக இருந்ததாக கூறும் இதே அண்ணாமலைதான் ஒரு மாதத்திற்கு முன்பு அவரை ஊழல் பேர்வழி என சொன்னார். அண்ணாமலை நிலைத்தன்மை இல்லாத நபர். நிரந்தரமான கருத்தில்லாதவர். பச்சோந்தி போல் மாறிக்கொண்டே இருக்கக் கூடிய நபர் தான் அண்ணாமலை. பாதயாத்திரை சென்று நேரத்தை வீணடிப்பதை விட குற்றாலத்திற்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் திருந்துவார் என நினைக்கிறேன்.

அண்ணாமலை

என்.எல்.சி விவகாரம்:

என்எல்சி விவகாரம் பற்றி கருத்து சொல்ல நான் நிபுணர் அல்ல. இதைப்பற்றி அதிகம் தெரியாது. ஆனால், பயிர்கள் விளைந்து கொண்டிருப்பதால் இரண்டு மாதம் கழித்து பணிகளை செய்திருக்கலாம். அறுவடைக்கு தயாராக பயிர்கள் உள்ள நிலையில், புல்டோசர், ஜேசிபி கொண்டு நிலத்தை எடுப்பது சரியாகப்படவில்லை” என்றார்.