தமிழ்நாடு

’’ராஜீவ் காந்தி கொலைவழக்கில் இருந்து அனைவரும் விடுதலையானது மகிழ்ச்சி’’ – அற்புதம்மாள்

webteam

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் இருந்து அனைவரும் வெளியில் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி 30 ஆண்டுகள் சென்னை புழல் சிறையில் இருந்த ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இன்று புழல் சிறையிலிருந்து இலங்கை சிறப்பு முகாமுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், ’’அனைவரும் சிறையில் இருந்து வெளியில் வந்தது மகிழ்ச்சி. ராபர்ட் பயாஸுக்கு உடல் நலம் சரியில்லை. முகாமுக்கு அனுப்பியுள்ளனர். அவரையும் விடுதலை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அவரது உடல்நிலையை கவனிக்க வேண்டும். சிறப்பு முகாம் என்பதால் தகுந்த ஏற்பாடு செய்யப்படலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசியல் காரணங்களுக்காகவும், மற்றவைக்காகவும் உள்ளவர்களுக்கு இந்த சட்டம் பயன்பட வேண்டும். ஒவ்வொருத்தராக சிறையில் இருந்து வெளியே வந்து அவர்களின் குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.