ராஜசேகர் பச்சை
ராஜசேகர் பச்சை pt web
தமிழ்நாடு

”மைனஸ் 40 டிகிரி வரை குளிர் இருந்தது”- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்த சென்னை இளைஞரின் பேட்டி

PT WEB

சென்னை கோவளத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. 27 வயது இளைஞரான அவர், கடந்த மே 19ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணியளவில் 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தார்.

ராஜசேகர் பச்சை எவரெஸ்ட்டில் ஏறிச் சாதனை படைத்ததைக் கண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார். எவரெஸ்ட் சிகரம் ஏறி முடித்தபின்னர் தற்போது அவர் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், எவரெஸ்ட்டில் ஏறிச் சாதனை படைத்தது குறித்து ராஜசேகர் பச்சை புதிய தலைமுறைக்கு சிறப்பு பேட்டி அளித்திருந்தார். இதுகுறித்து அவர், “யார் விடாமுயற்சியை மேற்கொள்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியும். எடுத்த உடனே எவரெஸ்ட் சிகரத்தை எட்டி சாதனை அடைய முடியாது. படிப்படியாகத்தான் செல்ல முடியும்.

கடந்த ஓர் ஆண்டாக பயிற்சி மேற்கொண்டதன் அடிப்படையில்தான் இந்த சாதனையை நான் புரிந்து இருக்கிறேன். எனது சாதனைக்கு முழுக்க, முழுக்க பயிற்சிதான் காரணம். பயிற்சி மேற்கொண்டால் அனைவராலும் இது முடியும். அங்கு அதிகமான குளிர். மைனஸ் 40 டிகிரி வரை குளிர் இருந்தது. அந்த சவாலை நான் அங்கு எதிர்பார்க்கவில்லை. அதேநேரத்தில் மலை ஏறும்போது இருமலும் அதிகமாக இருந்தது.

இதனால், முதல் ஒரு வாரம் மருத்துவமனையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தேன். மேலும், நான் மலை ஏறும்போது எனக்கு முன்னால் மலைமீது ஏறுபவர்கள் கற்களைத் தள்ளிவிடுவார்கள். அந்த கல் விழுந்ததில், ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகுதான் மீண்டும் மலை ஏறத் தொடங்கினேன். அதனால் நடப்பதற்கு சிறிது கஷ்டப்பட்டேன்” எனத் தெரிவித்தார்.