முன்னாள் திமுக அமைச்சர் எ.வ வேலு தொடர்புடைய சென்னை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 14 இடங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக "அறப்போர் இயக்கம்" அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 20.04.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 4 பக்கங்கள் கொண்ட புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், மார்ச் 2022-ல் கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சேர்ந்து, பணிகள் ஏதும் மேற்கொள்ளாமலேயே பொதுப் பணத்தை சுருட்டியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் 7 கோடி மதிப்பிலான சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் அதன் பணிகள் நிறைவு செய்யப்படாமல் 3.23 கோடி பணம் வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் அரசு பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது மற்றும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் இணைந்து சதி திட்டம் தீட்டியது, போலி ஆவணங்கள் மற்றும் பதிவுகள் மூலம் பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் முன்னாள் அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று (24.06.2026) வழக்கு பதிவு செய்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் எவ வேலு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தான், எ.வ. வேலுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வீடு மற்றும் சே.கூடலூரில் உள்ள சொந்த வீடு, திருவண்ணாமலை நகரில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நகர மன்ற தலைவருமான ஸ்ரீதரன் வீடு ஆகிய இடங்களில் 35 பேர் கொண்ட ஏழு குழுவினர் காலை 7 மணி முதல் 12 மணி நேரத்தை கடந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தற்போது வரை பொறியியல் கல்லூரியில் இருந்து சொத்து மற்றும் வங்கி தொடர்பான 13 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பல்வேறு இடங்களில் இருந்து கணக்கில் வராத 40 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.