தமிழ்நாடு

சென்னையில் பதுங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டினர்... கைது செய்த போலீஸ்

webteam

சென்னை முத்தியால்பேட்டையில் பதுங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 
சென்னை பாரிமுனையை அடுத்த  முத்தியால்பேட்டை அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள மசூதி ஒன்றில் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருக்கள் 5 பேரும், 3  பெண்களும் தங்கி இருப்பதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அங்கு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் 8 பேரும் சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.


மேலும் அரசு எச்சரித்தும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தலைமறைவாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து முத்தியால்பேட்டை போலீசார் 8 பேரையும் கைது செய்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லாததால், அதன் பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். கொரோனா தொற்று பரவிய பகுதியாக அப்பு மேஸ்திரி தெரு போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.