தமிழ்நாடு

ஈரோடு டூ பாலக்காடு: நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி

webteam

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டதால் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் இருப்பதால் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் ஈரோடு சந்திப்பில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

இதனால் நாள்தோறும் திருப்பூர், கோயம்புத்தூர் செல்லும் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாஷா, ரயில்வே அமைச்சர், ரயில்வே அதிகாரிகளுக்கு தொடர்ந்து பல மனுக்களை வழங்கி வந்தார்.

இதனையடுத்து சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈரோட்டில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதனையடுத்து ரயிலுக்கு மாலை அணிவித்து தேங்காய் உடைத்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி பயணிகளும் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.