தமிழ்நாடு

அரசு நிலம் வழங்குவதாக வதந்தி : மலையடிவாரத்தை பங்குபோட்ட மக்கள்

webteam

ஈரோட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மலையடிவார நிலத்தை பங்குபோட்டுக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கன்னிமா காடு என்ற மலையடிவாரப் பகுதியில் அரசு, நிலம் வழங்குவதாக வதந்தி பரவியது. இதையடுத்து சித்தோடு, காளிங்கராயன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அங்கு சென்று நிலத்தை பங்கு பிரிக்க ஆரம்பித்தனர். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தப் பகுதியை சுத்தம் செய்து தலா ஒன்றே கால் சென்ட் வீதம் மக்கள் பங்கு போட்டுக் கொண்டனர். 

இதேபோன்று 4 நாட்களாக அங்கு மக்கள் முகாமிட்டிருந்தனர். இதையறிந்த அதிகாரிகள் அங்கு சென்று காவல்துறையினரின் உதவியோடு மக்களை அப்புறப்படுத்தினர். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் வீடு வழங்கப்படும் என உறுதியளித்த அதிகாரிகள், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.