தமிழ்நாடு

சிறுமியை கொன்ற பக்கத்துவீட்டுப் பெண் : ஏன்? வாக்குமூலத்தில் பகீர்!

சிறுமியை கொன்ற பக்கத்துவீட்டுப் பெண் : ஏன்? வாக்குமூலத்தில் பகீர்!

webteam

7 வயது சிறுமியை தோளில் தூக்கிச்சென்று, கழுத்தை நெறித்துக் கொலை செய்த பக்கத்துவீட்டுப் பெண் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கருமாண்டி செல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி சண்முகநாதன் (40), கனகா (34). இவர்களுக்கு 2ஆம் வகுப்பு படித்து வந்த, தனிஷ்கா (7) என்ற மகள் இருந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த தனிஷ்கா, திடீரென மாயமானர். இதையடுத்து பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடிப் பார்த்த போது, அப்பகுதியில் இருந்த மரத்தடி ஒன்றின் கீழே இறந்த நிலையில் சிறுமி கிடந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனையில் சிறுமி தாக்கப்பட்டும், கழுத்து நெறிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் பாலியல் வன்கொடுமை எதுவும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை கொடூரன்கள் யாரும் கொல்லவில்லை என்பதை உணர்ந்தனர். எனவே சண்முகநாதன் குடும்பத்தினருக்கு வேண்டாதவர்கள் யாரேனும் தான் கொன்றிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து சண்முகநாதன் குடும்பம் தொடர்பாக விசாரித்தனர். அதன்படி, சண்முகநாதன் குடிப்பழக்கம் உடையவர் என்பதும், இதனால் அவரது குடும்பத்தில் பிரச்னை இருந்ததும் தெரியவந்துள்ளது. குடும்பத்தை நடத்தவே கனகா சிரமப்பட்டு வந்துள்ளார்.

கனகாவின் நிலையைக்கண்டு வீட்டு செலவு, குழந்தையின் படிப்பு, மருத்துவ செலவு உள்ளிட்ட தேவைகளுக்கு, பக்கத்துவீட்டுக்காரர் கமலக்கண்ணன் என்பவர் உதவி வந்ததுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கமலக்கண்ணனுக்கும், அவரது மனைவி வனிதாவிற்கும் குடும்பத்திற்குள் சண்டை வெடித்துள்ளது. அத்துடன் தங்கள் மகனை கமலக்கண்ணன் சரியாக கவனிப்பது இல்லை என்று வனிதா, கமலக்கண்ணனுடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்த தகவல்களை, அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் அறிந்த காவல்துறையினர், கமலக்கண்ணன் மீதும், கனகா மீதும் சந்தேகம் கொண்டனர். இருப்பினும் உரிய ஆதாரங்கள் இன்றி தடயங்களை தேடி வந்தனர். அப்போது சிறுமி தனிஷ்காவை, வனிதா தனது தோளில் தூக்கிச்சென்றதை பார்த்ததாக, அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் காவல்துறையினரின் சந்தேகம் தெளிவுபெற, உடனே வனிதாவை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அவர்கள் எழுப்பிய கிடுக்கிப்பிடி கேள்விகளில், குழந்தையை கொன்றது தான் தான் என வனிதா ஒப்புக்கொண்டார். 

குழந்தையை கொன்றதற்கான காரணம் குறித்து கேட்டபோது, தனது கணவர் தன்னையும், தனது மகனையும் கண்டுகொள்வதே இல்லை என்றும், வருமானம் அனைத்தையும் தனிஷ்காவிற்கே செலவு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக கணவர் கமலகண்ணனிடம் கேட்டபோது, ‘அப்படித்தான் செய்வேன். உன்னால் என்ன செய்ய முடியும். முடிந்ததை பாரு’ என்று கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தனிஷ்கா இருந்தால், பிற்காலத்தில் தானும், தன் மகனும் நடுத்தெருவிற்கு வந்துவிடுவோம் என எண்ணி, தனிஷ்காவை தீர்த்துக்கட்ட முடிவெடுத்ததாக கூறியுள்ளார். அதன்படியே, குழந்தையை கடைக்கு அழைத்துச்செல்வதாக ஆசைகாட்டி தூக்கிச்சென்று, கழுத்தை நெறித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.