தமிழ்நாடு

பண்ணாரி அம்மன் கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் - ரசிகர்களுடன் ஜாலி செல்ஃபி!

webteam

கர்நாடகாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் வடிவேலு திடீரென பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க் கிழமை) திரைப்பட நடிகர் வடிவேலு கோயிலுக்கு வந்தார். நடிகர் வடிவேலு கோயிலுக்கு வருவதைக் கண்ட அப்பகுதியில் இருந்த பக்தர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

அவர்களிடம் இருந்து மீண்டு கோவிலுக்குள் சென்ற நடிகர் வடிவேலு, பண்ணாரி அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் நடிகர் வடிவேலுக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலுவை கண்டவுடன் பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அப்போது நடிகர் வடிவேலு கோவிலில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவரை ஆரத்தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு திம்பம் மலைப்பாதை வழியாக பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பிற்கு மைசூர் செல்வதாக தெரிவித்தார்.

நடிகர் வடிவேலு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு திடீரென வருகை தந்து சாமி தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.