தமிழ்நாடு

ஈரோடு: விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி தொழிலாளி உயிரிழப்பு.!

webteam

ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு சம்பத்நகர் அடுத்துள்ள கொத்துக்காரர் வீதியில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்கள் இயங்கி வரும் விசைத்தறி கூடத்தில் 24 தறிகள் உள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம்போல நீலமேகம், மாற்றுத்திறனாளிகளான செந்தில் மற்றும் விஜி ஆகிய மூவர் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது மின் கசிவு ஏற்பட்ட‌ காரணத்தால், விசைத்தறி கூடம் முழுவதும் தீ பரவியது. அதில் நீலமேகம், செந்தில் ஆகியோர் உயிர் தப்பிய நிலையில் மாற்றுத்திறனாளியான விஜி என்பவர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணிநேரமாக போராடி தீயை அணைத்தனர். மேலும் உயிரிழந்த விஜியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் , உரிமையாளர் பெரியசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தீவிபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியதாக கூறப்பட்டுள்ளது.