தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2023ல் முறிந்த அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளதை சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று உறுதிப்படுத்தினார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்கமாட்டோம் என்று அதிமுகவினர் கூறிய நிலையில் இப்போது கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தக் கூட்டணி குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் விமர்சித்து வருகின்றன.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பதிவில், ”நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா? குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா? இந்தத் துரோகக் கூட்டணியை - தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, இக்கூட்டணி குறித்து முதலவர் விமர்சித்திருந்த நிலையில், இன்றும் மீண்டும் பதிவிட்டுள்ளார்.
இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. தலைவரும், விடியா தி.மு.க. அரசின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை தி.மு.க. பொதுக்குழுவில் சொன்னார். நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அ.இ.அ.தி.மு.க.-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்! பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் தள பதிவு வாயிலாக தெரிவித்தேன்.
தமிழ்நாட்டு நலனுக்கான ‘குறைந்தபட்ச செயல் திட்டம்' இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் அறிவித்திருந்தார். ‘என்னவா இருக்கும்’ என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார். மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்! மு.க.ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது” என அதில் தெரிவித்துள்ளார்.