தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் 108 இடங்களில் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்று, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்திருக்கிறது. அதேசமயம், கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்தசூழலில் தான், அதிமுகவின் தோல்வி மற்றும் உட்கட்சிப் பூசல் காரணமாக தற்போது கே. பழனிசாமி தரப்பு, எஸ்.பி வேலுமணி தரப்பு என அக்கட்சி இரண்டு தரப்பாக பிரிந்திருக்கும் நிலையில், வேலுமணி தரப்பை சார்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வின்போது, தவெகவுக்கு ஆதரவளித்திருந்தனர்.
தொடர்ந்து, வேலுமணி தரப்புக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டம் பயலாம் உள்ளிட்ட சவால்கள் காரணமாக அவர்களுக்கு சட்டப்பேரவையில் இடம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தசூழலில் தான், சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகரைச் சந்தித்து வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ-கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். தொடர்ந்து, தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இடைத்தேர்தலில், தவெக சார்பில் இவர்களுக்கு வாய்ப்பளிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, அதிமுக எம்.எல்.ஏ-கள் 2 தரப்பாக உடைந்திருந்த நிலையில், தற்போது மூன்றாக உடைந்திருக்கிறது. அதேசமயம், எஸ்.பி. வேலுமணி தரப்பில் இருந்த, சுகுமார், திலீபன் ஜெய்சங்கரன், ஹரி பாஸ்கர் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ-கள் கே. பழனிசாமி தரப்புக்கு மீண்டும் ஆதரவளிப்பதாக தெரிவித்ததுடன் கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக மன்னிப்பு கடிதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தசூழலில் தான், எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-களில் எண்ணிக்கை 17-ஆக குறைந்திருக்கிறது. இதன்மூலம், அதிமுகவில் கே. பழனிசாமியின் கை மீண்டும் உயர்ந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
கட்சித் தாவல் தடைச்சட்டத்தில் வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-கள் மீது சபாநாயகரிடம் கே. பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-கள் நிலை என்ன? என கேள்வி எழுந்திருக்கிறது.