மு. வீரபாண்டியன் - விஜய் Pt web
தமிழ்நாடு

முதல்வர் விஜய் பதவியேற்பு விழா.. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் இசைக்கப்பட்டது மரபு மீறல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

PT WEB

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்லில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸ், சிபிஐ, விசிக, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் 13-வது முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதற்கான பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற நிலையில், தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டதும், தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக இசைக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்

இச்சம்பவத்திற்கு, பலரும் கண்டனங்களை தெரிவித்துவரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும். 'வந்தேமாதரம்" ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் "வந்தேமாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. நாளை (11.05.2026) சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப் பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தாற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.