பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடுவது 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில், ஆன்லைன் கலந்தாய்வு வரும் 17ல் தொடங்குகிறது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5சதவீத ஒதுக்கீடும் சேர்க்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில், 1 லட்சத்து 74 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், தற்காலிக அட்டவணையை கலந்தாய்வு நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தரவரிசை பட்டியல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. முதலில் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பப் படிப்புகளில் ஒதுக்கப்பட்ட 7.5சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக, துணை கலந்தாய்வு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரையிலும், மத்திய அரசு அளிக்கும் உதவியைப் பெறும் பட்டியலின மாணவர்களுக்கான கலந்தாய்வு 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மொத்தத்தில் கலந்தாய்வை அக்டோபர் மாதம் 25ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: ஓடிடியில் வெளியான படங்கள் தியேட்டரில் திரையிடப்படாது - திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு