கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் மதகு உடைந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கேஆர்பி அணையின் மதகு உடைப்பு காரணமாக நேற்று பணி ஓய்வு பெற இருந்த செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 52 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.பி அணையின் ஒன்றாவது மதகில் கடந்த புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அணையின் மதகுகள் 2 கோடி ரூபாய் செலவில் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்ட நிலையில், பராமரிப்பு பணியில் முறைகேடு நடந்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். அதனையடுத்து, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியத்தை பணியிடைநீக்கம் செய்து பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முதல் மதகில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அணையின் நீரிருப்பை 32 அடிக்கு கீழ் குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால் அணையில் நேற்றிருந்த 51 அடி தண்ணீர் மற்ற பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீரிருப்பு 40 அடியாக உள்ளது என்றும் 32 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறையும்போது சீரமைப்பு பணிகளை தொடங்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்காக தற்காலிகமாக 12 அடி உயரத்திற்கு மதகு கதவு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனால் அணையின் மொத்த உயரமான 52 அடியை 44 அடியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 944 கன அடியாக உள்ள நிலையில், 8 ஆயிரம் கன அடி அளவிற்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.