தமிழ்நாடு

எந்திரன் படக்கதை விவகாரம்: சங்கருக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி

kaleelrahman

எந்திரன் பட கதை காப்புரிமை மீறல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி மறுத்ததை எதிர்த்து, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என கூறி, இயக்குனர் சங்கருக்கு எதிராக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி கோரி ஆரூர் தமிழ்நாடன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, சட்டப்படி இதுபோன்ற வழக்குகளில் மேல் முறையீடு செய்ய சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வரம்புக்குள் இந்த மனு வராது என்பதால், இது விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி ஆரூர் தமிழ்நாடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.