தமிழ்நாடு

‘குட்டி’ இறந்தது தெரியாமல் எழுப்ப முயலும் ‘தாய் யானை’ - கலங்க வைத்த பாசப்போராட்டம்

webteam

கூடலூர் அருகே உயிரிழந்த குட்டி யானையை விட்டு விலகாமல் உள்ள தாய் யானையை துரத்தி குட்டியை மீட்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள நாயக்கன்சோலை பகுதியில் நேற்று இரவு காட்டு யானை வழக்கத்திற்கு மாறாக சத்தம் எழுப்புவதை அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர். காலை அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது குட்டி யானை ஒன்று இறந்த நிலையில் கிடைந்துள்ளது. அதன் அருகே தாய் நின்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று இறந்த குட்டி யானையை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் தாய் யானை, இறந்த குட்டி யானையை விட்டு விலகாமல் அங்கேயே நின்றது. 

காலை முதல் தாய் யானையை விரட்ட வனத்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் குட்டியை விட்டு விலகாத தாய், அது உயிரிழந்ததை அறியாமல் எழுப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்தக் காட்சி காண்போரை கலங்கச் செய்தது. வனத்துறையினராலும் இறந்த குட்டி யானையை மீட்க முடியவில்லை. தாய் யானை ஆக்ரோஷத்துடன் காணப்படுவதால், அதுவாக குட்டியை விட்டு செல்லும் வரை யாரும் விரட்ட வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.