கோயம்புத்தூர் மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானையை வனத்துறையினர் வனப்பகுதியில் விரட்டினர்.
கோவையில் உள்ள மதுக்கரை, கோவைப்புதூர், வெள்ளலூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து விளைநிலங்களை நாசப்படுத்துவதோடு மட்டுமின்றி பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கோவையை அடுத்துள்ள கோவைப்புதூர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு நுழைந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தது. இதையடுத்து, சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை தனது தந்தத்தால் முட்டி தள்ளியது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை போத்தனூர் மற்றும் வெள்ளளுர் பகுதியில் நுழைந்த காட்டு யானை தாக்கி 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.