தமிழ்நாடு

குட்டியுடன் காரை தாக்கிய பெண் யானை - பயத்தில் 'எஸ்கேப்' ஆன பயணி!

நிவேதா ஜெகராஜா

ஆசனூர் அருகே குட்டிடன் காரை தாக்கிய பெண்யானையை கண்டு, காரில் இருந்து பயணிகள் தப்பியோடியுள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இதில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கரும்பு லாரியை எதிர்ப்பார்த்து சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன. அந்த வகையில் நேற்று மாலை ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தனது குட்டியுடன் உலாவியது. அப்போது அவ்வழியாக சென்ற வாகனங்களை மறித்து கரும்பு உள்ளதா என சோதனையிட்டது. நடுரோட்டில் யானைகள் உலாவியதால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் வரிசையாக நின்றன. நீண்ட வரிசையில் நின்று இருந்த வாகனங்களின் நடுவே காட்டுயானைகள் சுற்றித்திரிந்தன.

காட்டு யானைகளை கண்டு அச்சம் அடைந்த போலீஸ் வாகனம் பின்னோக்கி வந்தது. அதனைத் தொடர்ந்து பின்னால் வந்த காரை திருப்ப முயன்றபோது ஆக்ரோஷசத்துடன் வந்த யானைகள் காரை உலுக்கின. கார் சைடு மிரரை உடைத்து சேதப்படுத்தியதுடன் காரை உலுக்கியது. அப்போது காரில் இருந்த நபர் யானையிடமிருந்து தப்பியோடினர். பின்னர் காரை வேகமாக இயக்கி தப்பினர். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய காட்டு யானைகள் திடீரென காரை தாக்கி தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

- செய்தியாளர்: டி.சாம்ராஜ்