தமிழ்நாடு

பதவியிலிருந்தபடி நகராட்சி தேர்தலில் போட்டி: உள்ளாட்சி பிரதிநிதிகளை எச்சரித்த தேர்தல்ஆணையம்

நிவேதா ஜெகராஜா

ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், தங்கள் பதவியில் இருந்து நீங்காமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தால், அவர்கள் ஏற்கெனவே உள்ள பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அட்டவணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26.01.2022 அன்று வெளியிட்டது. அதன்படி தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 28.01.2022 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பான தேர்தல் ஆணைய அறிக்கையில், ``மேற்படி பதவிடத்திற்கு தற்போது மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் அல்லது கிராம ஊராட்சித் தலைவராக பதவியிலிருப்போர் தங்கள் பதவியினை ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்பட்சத்தில், அவர்கள் தாங்கள் போட்டியிடும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது வெற்றி வாய்ப்பினை இழந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த நடவடிக்கையாவும், இப்போது இவர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்கின்ற உறுதிமொழி ஆவணத்தில் இருப்பிடம் குறித்து அளித்திருக்கும் உறுதிமொழியினை ஆவணமாகக் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994, பிரிவு 38 (3) (g) அல்லது 43 (6)-ன்படி எடுக்கப்படும். இப்பிரிவுகளின்கீழ், அவர் தற்போது தொடர்புடைய ஊராட்சிப் பகுதியில் வசிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டு, மேற்படி சட்டம், பிரிவு 41(1)-ன்படி, அவரை தற்போது அவர் வகிக்கும் பதவியில் தகுதிநீக்கம் செய்யலாம் என்வும், இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.