தமிழ்நாடு

மே.வ: துர்கா பூஜையின் போது திடீர் வெள்ளம்... 7 பேர் பலி; பதைபதைக்கவைக்கும் வீடியோ காட்சி

நிவேதா ஜெகராஜா

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தபட்சம் ஏழு பேராவது உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சில உள்ளூர் ஊடகங்கள் இறப்பு எண்ணிக்கை 8 என்றும் தெரிவிக்கின்றன.

ஜல்பைகுரியின் மல்பஜாரில் இரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, துர்கா பூஜையின் போது திடீரென வந்த வெள்ளப்பெருக்கில் அங்கு கூடியிருந்த 7 பேர் பலியாகினர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என சொல்லப்படுகிறது.

மொத்தம் அங்கு 30 முதல் 40 பேர் கூடியிருந்ததாகவும், அவர்கள் அனைவருமே இந்த வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகவும் குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இரங்கள் தெரிவித்துள்ள பிரதமர் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் துர்கா பூஜை விழாவின் போது ஏற்பட்ட விபத்தால் மன வேதனை அடைந்துள்ளதாகவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்நத இரங்கல் என ட்விட்டரில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

அந்த இரவில் மழை வெள்ளம் எதுவும் கணிக்கப்படவில்லை என்பதால், மக்கள் அங்கு பூஜைக்காக குழுமியதாகவும், இது எதிர்பாராது ஏற்பட்டுவிட்டது என்றும் அங்குள்ள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.