திருவண்ணாமலையைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தை, கடந்த நவம்பர் மாதம், விசில் ஊதி விளையாடும் போது தவறுதலாக விசிலை விழுங்கியுள்ளார். அருகாமையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு X Ray, CT chest Scan செய்து எதுவும் உடல் நிலை பாதிப்பு இல்லாததால் மறுபடியும் ஏதேனும் நோய் அறிகுறி இருந்தால் மீண்டும் மருத்துவமனைக்கு வருமாறு மருத்துவர்கள் கூறியதால் குழந்தையின் உடலிலிருந்து விசிலை வெளியேற்றாமல் அப்படியே பெற்றோர்கள் விட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அந்த குழந்தை மூச்சு விடும் போது விசில் ஒலி போன்ற சத்தம் கேட்டுள்ளது, இதனால் அச்சமடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் குழந்தையை சோதித்ததில் ஆழமாக மூச்சு வாங்கிய போது விசில் சத்தம் வருவது உறுதி செய்யப்பட்டது. இதற்கடுத்து நுரையீரல் சிறப்பு பிரிவில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.
அந்த குழந்தைக்கு Fiber Optic Bronchoscopy எனப்படும் மூச்சு குழாய் ஆய்வு கருவி மூலம் பரிசோதித்த போது, குழந்தை விழுங்கிய விசில் Right Bronchus Intermedius எனப்படும் நான்காம் நிலை சிறிய மூச்சு குழாயில் ஆழமான பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. நேற்று நுரையீரல் பிரிவு பேராசிரியர் பாலமுருகன் முன்னிலையில், மருத்துவர் ஷாஜாத்தி மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் மூன்று மணி நேரம் தீவிர முயற்சிக்கு பின் விசிலை வெற்றிகரமாக வெளியேற்றினார்கள்.
இது குறித்து குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் மதிவாணன் தெரிவிக்கும் போது, வீட்டில் சின்னஞ் சிறு குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள் கண் பார்வையில் இருந்து மட்டுமே விளையாட உறுதி செய்ய வேண்டும். எளிதில் விழுங்க கூடிய, சிறிய பொருட்கள், குழந்தைகள் கைகளுக்கு எளிதில் கிடைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் நுரையீரல் போன்ற உறுப்புகளில் சிக்கி கொண்டால் உயர் தீவிர அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே எடுக்கும் அளவிற்கு ஆபத்தில் முடியும். தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு சுமார் 3 லட்சம் வரை தேவைப்படும், ஆனால் அந்த சிகிச்சை எழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொண்டுள்ளோம் என கூறுகிறார்.