தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி 2014 இல் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்ததும், புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்திட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய அரசின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்று அமைத்தது.
டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு 2016 இல் தனது வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இதன்படி புதிய கல்விக் கொள்கையில் பல மாற்றங்களை புகுத்துவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 2018 டிசம்பர் 15 ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை தயார் ஆகிவிட்டதாகவும், எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்றும் அறிவித்தார்.
தற்போது மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்திய அரசு பொறுப்பேற்றவுடன், கஸ்தூரி ரங்கன் குழு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்று ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில் மாநிலக் கல்விகளில் ஆங்கிலம், மற்றும் தாய் மொழியை பயிற்றுவிக்கும் வகையிலுள்ள இருமொழிக் கொள்கைக்குப் பதிலாக மூன்று மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படலாம் எனப் பேச்சு அடிப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை விரைவில் அறிவிக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்தக் குழப்பங்களுக்கு விடையளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய தலைமுறைக்கு தொலைபேசி மூலமாக சில விளக்கங்களை அளித்துள்ளார். அப்போது, தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் எங்கள் லட்சியமாக இருக்கிறது. தமிழும், ஆங்கிலமும்தான் தமிழகத்தில் தொடர்ந்து வீறுநடை போடும். ஆகவே மும்மொழிக் கொள்கை முடிவு தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போதும் தமிழக அரசு பதில் அளித்திருந்தது; தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டது, நாட்டிற்கு தமிழகம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.