தமிழ்நாடு

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மக்கள்தான் வாரிசு- முதல்வர் பழனிசாமி

JustinDurai

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மக்கள்தான் வாரிசு என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்த வாணியம்பாடி பகுதியில் அம்மா மினி கிளீனிக்கை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''ஏழை எளிய கடைமட்ட மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அதிமுக என்ற இயக்கத்தை தொடங்கியவர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர். என்றும் அதன் அடிப்படையிலேயே பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொடுத்தவர் ஜெயலலிதா.

இவர்கள் இருவருக்கும் வாரிசு இல்லை. மக்கள்தான் இவர்களின் வாரிசுகள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கிராமத்தில் வாழும் ஏழை எளிய நம் மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயேதான் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறேன். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் கட்சியினரை சந்தித்து வேண்டுமென்றே அரசின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவது பெரிதா இல்லை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் தொண்டர்களை சந்திப்பது பெரிதா” என முதல்வர் கேள்வி எழுப்பினார்.

தன் குடும்பத்திற்காக சுயநலமாக செயல்படுபவர்கள் திமுகவினர் என்று விமர்சித்த முதலமைச்சர் மக்களின் குறிப்பறிந்து அவர்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவது அதிமுக என்றும் கூறினார்.