தமிழ்நாடு

”ஜெ. மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும்” - டிடிவி தினகரன்

ச. முத்துகிருஷ்ணன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளரிடம் பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா இயற்கையாகவே, நோய்த்தொற்று ஏற்பட்டு மரணமடைந்தார். ஜெயலலிதா மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சசிகலாவை பழிவாங்க வேண்டும் உள்ளிட்ட அரசியல் ஆதாயங்களுக்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்றார்.

மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை என்று தெரிவித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக மக்களை ஆளுநர் பழிவாங்க கூடாது என்று கூறினார். தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் என தெரிந்தும் அதற்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். வரும் காலங்களில் தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், அரசியல் ஆதாயத்திற்காக தான் ஆணையம் கொண்டுவரப்பட்டது. அவரால் கொண்டுவரப்பட்ட ஆணையம், அவரையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.