தமிழ்நாடு

”மகளிருக்கு உரிமைத்தொகை இல்லை! பட்ஜெட் ஏமாற்றமே”-விமர்சனங்களை அடுக்கும் எடப்பாடி பழனிசாமி

webteam

மாநிலத்தின் வருவாய் அதிகரித்தபோதும் கடனின் அளவு குறையவில்லை. கல்விக்கடன் ரத்து, மகளிருக்கு உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு படித்தவர்களையும் ஏமாற்றிவிட்டது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

2022-23 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் 1லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தது, அவரது ஆட்சிக்கு பிறகு நாங்கள் ஆட்சியை விட்டு செல்லும் போது வெறும் 4.8 லட்சம் கோடி கடன் மட்டுமே இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் மாநில அரசின் வருவாய் அதிகரித்து இருக்கிறது. ஆனால் கடன் குறையவில்லை. மாறாக கடனும் அதிகரித்திருக்கிறது. இதன்மூலம் இவர்கள் சரியாக செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

பட்ஜெட் எப்படி?

“2022 நிதிநிலை அறிக்கை ஒரு வெத்துவேட்டு அறிக்கை. கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் இதுவரை அதை குறைப்பதற்கான வழிகள் எதுவும் செய்யவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கட்டுமான பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலுக்குள் கொண்டு வரப்படும் என்று கூறி இருந்தார்கள். ஆனால் அதையும் செய்யவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதுவரை பெட்ரோலுக்கும் டீசலுக்கும் மூன்று ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

“வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை”

“திமுக ஆட்சி அமைத்த பிறகு கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்று நிதிநிலை அறிக்கையில் கல்விக்கடன் ரத்து பற்றி எதுவும் இடம்பெறவில்லை. விடியா அரசின் நிதிநிலை அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்காமல் சாக்கு போக்கு கூறி தள்ளி போட்டு உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதியம் அமல்படுத்தபடும் என கூறியிருந்த நிலையில் அதுகுறித்தும் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. திமுக அரசு படித்தவர்களையும் ஏமாற்றிவிட்டது” என்று குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி.

”உள்ளாட்சித்தேர்தலில் முறைகேடு”

“நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய கள்ளாட்டதை திமுக செய்துள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அப்போது சென்னையில் 138 பேர்தான் தினசரி பாதிப்பு. ஆனால் அந்த சமயத்தில் 6 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது முறைகேடு. இந்த வேளையில் கள்ள ஓட்டு போட்டுள்ளது திமுக” என்று குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி.