தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சை பொய்யர் - ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜா. ஜாக்சன் சிங்

"தான் ஒரு பச்சை பொய்யர் என்பதை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் நிரூபித்திருக்கிறார்" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான், 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல் எப்படி நேர்மையாக நடத்தப்பட்டதோ, அதேபோல நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும்.

கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், கடந்த 9 மாதங்களாக முதல்வர் மு.க. ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கோவை மீது கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார்கள். அதனால், கோவை இனிமேல் அதிமுக கோட்டையாக இருக்காது. இது தெரிந்ததால் தான், கோவையை தனி மாநிலம் என்பது போல எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஒரு பச்சை பொய்யர் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். அதனை எடப்பாடி பழனிச்சாமியே இன்று நிரூபித்து விட்டார்.

நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் திமுக அமோக வெற்றிபெறும் என அவர் கூறினார்.