தமிழ்நாடு

``பொம்மை முதலமைச்சர் போல ஆட்சி செய்கிறார் ஸ்டாலின்” - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

நிவேதா ஜெகராஜா

”அதிமுக-வை உடைக்கும் எண்ணத்தில் அதிமுக நிர்வாகிகள் மீது தேடித்தேடி வழக்குகள் போடப்படுகின்றன. ராஜேந்திர பாலாஜி வழக்கை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது” என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

சிவகாசிக்கு மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கலந்துகொண்டார். அதில் அவருடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக ஆட்சியில் 8 மாத காலம் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் முடிவுற்ற திட்டங்களையே முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தொடங்குகிறார். திமுகவில் கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்துள்ளார்கள். மேலும், இந்த அரசு கொள்ளை அடிப்பதையே பிரதானமாக கொண்டு செயல்படுகிறது.

பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.2,500 கொடுத்தது அதிமுக அரசு. மேலும், பொங்கல் தொகுப்பினை தரமானதாக வழங்கியது அதிமுக அரசு. அப்போது ரூ.5,000 கொடுக்க சொன்ன மு.க.ஸ்டாலின், தற்போது எதுவுமே வழங்கவில்லை. இப்படி மக்களின் வயிற்றில் அடித்த கட்சியாக இருக்கிறது தி மு க. சர்வாதிகார அரசாங்கமாகவும் திமுக உள்ளது. இவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

கட்சியை உடைக்க அதிமுக நிர்வாகிகள் மீது தேடி தேடி வழக்கு போடுகிறார்கள். ராஜேந்திர பாலாஜி மீதும்கூட, வேண்டுமென்றே வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் மீது போடப்பட்ட வழக்கு வேடிக்கையாக உள்ளது. நாங்கள் இதுபோன்ற எதற்கும் அஞ்ச போவதில்லை. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. ஒரு பொம்மை முதலமைச்சர் போல ஆட்சி செய்கிறார் ஸ்டாலின். சொல்லப்போனால் மக்கள் பிரச்சனைகளை விட தன் சொந்த வேலை மட்டுமே பார்க்கிறார் ஸ்டாலின்.

சிவகாசி மாநகராட்சியை பொறுத்தவரை, இதை மாநகராட்சி அறிவித்தது, திறந்து வைத்தது அம்மா அரசு. மேலும், அடிப்படை தேவைகளை நிறைவேற்ற 100 கோடி ஒதுக்கியது அம்மா அரசு. கூடவே பள்ளிகளை தரம் உயர்த்தியது. பேருந்து நிலையம் அமைத்து கொடுத்தது, கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அம்மா அரசு. இவற்றுடன், 8 லட்சம் தொழிலாளர்களின் நலனை கருதி GST-ஐ குறைத்தது. உடன் பட்டாசு தொழிலாளர்களுக்கு தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தியது. உயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கியது. பட்டாசு பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுத்தது.

திமுக ஆட்சி வந்து இவ்வளவு மாதங்கள் ஆகியும், நீட் தேர்வு ரத்து என்ன ஆனது என மக்கள் கேட்கின்றனர். அதுமட்டுமா? 25 மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் இங்கு குறையவில்லை. மட்டுமன்றி தற்போது வரை இங்கு பதில் இல்லை. அந்தவகையில் சொல்வது ஒன்று செய்வது ஒன்று தான் இந்த அரசு. லஞ்சம் இல்லாத துறையே இங்கு இல்லை என்பதும் வேதனை” என்றார்.

- செந்தில்குமார்