தமிழகத்தில் மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணிப்பதற்கு இ-பாஸ் கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி உள்ளிட்ட நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்குத் தமிழக அரசு கோரியிருந்தது. அதற்கு ரயில்வே துறை அனுமதி கொடுத்ததன் அடிப்படையில், நாளை முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவுகளும் நேற்று முதலே தொடங்கிவிட்டன.
இதனிடையே இந்தியா முழுவதும் 5வது கட்ட பொது முடக்கம் தளர்வுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் தளர்வுகளின்படி எவை இயங்கும் என்பது தொடர்பாகவும், எதற்கெல்லாம் இ-பாஸ் தேவை என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கும் இ-பாஸ் தேவை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேசமயம் மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ-பாஸ் பெறுவது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நாளை 4 வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் பயணிப்பதற்கும் இ-பாஸ் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.