தமிழ்நாடு

15 வருடங்களாக யாசகம் செய்துவந்த நபர் மரணம்.. இறுதி சடங்கு செய்த பொதுமக்கள்..!

15 வருடங்களாக யாசகம் செய்துவந்த நபர் மரணம்.. இறுதி சடங்கு செய்த பொதுமக்கள்..!

webteam

போரூரில் சாலையோரத்தில் இறந்து கிடந்தவரை பொது மக்கள் ஒன்று சேர்ந்து தனது குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல் இறுதி சடங்கு செய்த சம்பவம் நடந்துள்ளது.

போரூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் ஏராளமான ஆதரவற்றோர் மற்றும் யாசகம் செய்வோர் வசித்து வருகின்றனர். கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு நேரத்தில் போரூர் பொதுமக்கள் அங்குள்ள ஆதரவற்றவர்ளுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் 15 வருடங்களாக தங்கி யாசகம் செய்து வந்த வயதான நபர் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்து போனார். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த தகவல் இவர்களுக்கு வழக்கமாக உணவு அளித்து வந்த போரூரை சேர்ந்த பொதுமக்களுக்கும் பரவியது.

தகவல் அறிந்த போரூர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த நபரின் உடலை போலீசாரின் அனுமதி பெற்று தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்தனர். மேலும், போரூரில் உள்ள மின்மயானத்தில் உடலை தகனம் செய்தனர். தினந்தோறும் தாங்கள் உணவளித்து வந்த ஒருவர் இறந்ததற்கு பொது மக்கள் ஒன்று சேர்ந்து இறுதி சடங்கு செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.