தமிழ்நாடு

வாங்கிய கேக்கிற்கு பணம் கேட்டதால் கோபம் - கடையை அடித்து நொறுக்கிய போதை ஆசாமிகள்

ஜா. ஜாக்சன் சிங்

நாகை மாவட்டத்தில் வாங்கிய கேக்கிற்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இனிப்புக் கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டம் திருப்பூண்டி கடை தெருவில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருபவர் முகமது அலி. இன்று வழக்கம் போல முகமது அலி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, மது போதையில் கடைக்கு வந்த 4 நபர்கள் அரைக்கிலோ கேக் கேட்டுள்ளனர். கேக்கை கொடுத்த கடை உரிமையாளர், கேக்கிற்கு உரிய பணம் கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த போதை ஆசாமிகள், கடை உரிமையாளரை கொச்சையான வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். பின்னர், கடை உரிமையாளரை தாக்கிய அவர்கள், கடையில் உள்ள கண்ணாடி உள்ளிட்ட பொருட்களையும் போட்டு உடைத்துள்ளனர்.

இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வருவதை பார்த்த போதை ஆசாமிகள், அங்கிருந்து தப்பியோடினர். இதில் ஒருவரை பிடித்து கீழையூர் போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், பிடிப்பட்ட நபர் காரைநகர் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.