தமிழ்நாடு

புதுக்கோட்டை: குடிபோதையில் அரசு பள்ளி ஆசிரியையை வகுப்பறைக்குள் நுழைந்து தாக்கிய நபர்!

webteam

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசு பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியையை குடிபோதையில் வகுப்பிற்குள் புகுந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை சித்திரா தேவி. இவர் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை என்னும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல இன்று பள்ளிக்கு பணிக்குச் சென்ற ஆசிரியை சித்ராதேவி அங்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் குடிபோதையில் பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பள்ளியின் ஆசிரியை சித்ரா தேவியை கன்னத்தில் அறைந்ததோடு, கொலை மிரட்டல் விடுத்து ஆசிரியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த போது பள்ளியில் பயிலும் 26 மாணவர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் சம்பவ இடத்திலிருந்துள்ளனர். பின்னர் அங்கு வந்தவர்கள் சித்திரவேலை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். இது தொடர்பாக ஆசிரியை சித்ராதேவி வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வடகாடு போலீசார் சித்திரைவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியையை மது போதையில் இருந்த நபர் வகுப்பறைக்குள் புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.