திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தபோது, ஒரு போதை ஆசாமி காவலரை கத்தியால் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காவலர் ராமகிருஷ்ணன் தன்னைக் காத்துக்கொள்ள முயற்சித்தார், மற்ற காவலர்கள் அந்த ஆசாமியை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அந்த நபர் தஞ்சாவூரை சேர்ந்த இளங்கோ என தெரியவந்தது.
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வருகின்றனர். இதனால் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கே வந்த போதை ஆசாமி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போதையில் இருந்த வாலிபர் தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாரை ஆக்ரோஷமாக தாக்க முயற்சி செய்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காமல் இருந்த காவலர் ராமகிருஷ்ணன் தன்னை தற்காத்து கொள்ள தனது இடுப்பில் இருந்த பெல்ட்டை கொண்டு தடுக்கவே அருகே இருந்த மற்ற காவலர்கள் போதை ஆசாமியை மடக்கி பிடித்து கத்தியை பிடிங்கினர். அதனை தொடர்ந்து போதையில் இருந்த வாலிபரை சோதனை செய்ததில் அவரிடம் மிளகாய் தூள் மற்றும் தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் பற்கள் உடைய பட்டாகத்தி இருந்துள்ளது.
தொடர்ந்து காவலரை தாக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் முதல் விசாரணையில் போதையில் இருந்த வாலிபர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்ற இளங்கோ என்று கூறி உள்ளார். பொது மக்களுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலரை போதையில் இருந்த வாலிபர் கத்தியால் தாக்க முயன்று சம்பவம் கோவில் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போதை வாலிபரின் இத்தகைய செயலால் காவலர் ராமகிருஷ்ணன் நூல் இலையில் உயிர்த்தப்பினார்.