சென்னையில் காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி, பொதுமக்கள் மத்தியில் கார் ஓட்டுநர் நடுரோட்டில் தீக்குளித்தார்.
நெல்லை சங்கரன்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தாம்பரத்தில் தங்கி கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இன்று ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கி மணிகண்டன் தனது கால் டாக்சியில் வந்தபோது, சீட் பெல்ட் அணியாததைக் கண்ட போக்குவரத்து காவல்துறையினர் அவரை அடித்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
அதனால், தனது செல்போன் மூலம் வாக்குமூலம் அளித்துவிட்டு மணிகண்டன் நடுரோட்டில் தீக்குளித்தார். அதையடுத்து, காவல்துறையினர் அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உறுதி அளித்துள்ளார். தீக்குளித்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், உயிருக்கு ஆபத்தில்லை என்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.