சென்னை வேளச்சேரியில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரி நேருநகர், பாரதிதாசன் தெருவில் கடந்த ஓராண்டாக வசித்து வருபவர்கள் ஜெயராஜ், இலக்கியா தம்பதி. இவர்கள் இருவரும் ஒன்றரை ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜெயராஜ் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இலக்கியா பீனிக்ஸ் மாலில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இருவரும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள், இலக்கியாவிற்கு உறவினர்கள் யாரும் இல்லை.
இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இலக்கியா சமைக்கவில்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறபடுகிறது. இந்தத் தகராறில் இலக்கியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதுபோல் செய்து விட்டு ஜெயராஜ் கத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று இலக்கியாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றிய கிண்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, 174 பிரிவின் கீழ் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்திருப்பதாக மருத்துவர்கள் கிண்டி போலீசாருக்கு தெரிவித்தனர். அதனடிப்படையில் ஜெயராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை கிண்டி போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.