திருவள்ளூர் அருகே பணியிடமாறுதல் பெற்று செல்லும் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரை சூழ்ந்துகொண்டு மாணவ மாணவிகள் கண்ணீர்விட்டு அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள பகவான் என்பவர் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது என நேற்று மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பணிமாறுதல் பெற வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர்.
வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என ஆசிரியரிடம் மாணவர்கள் மன்றாடினர். பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் ஆங்கில ஆசிரியரை பிரிய மனம்இல்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை மனம் உருகச் செய்தது.