தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் காலமானார். அவருக்கு வயது 56. ஐஏஎஸ் அதிகாரியான இவர், கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலராக பணியாற்றினார். செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத் துறை திட்ட இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன், சிகிச்சை பலனின்றி காலமானார்.
பீலா வெங்கடேசன்... சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வெங்கடேசன் - ராணி தம்பதிக்கு, 1969-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பிறந்தவர் பீலா. இவரின் தந்தை எல்.என்.வெங்கடேசன். தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வுபெற்ற இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடியை சேர்ந்தவர். தாய் ராணி வெங்கடேசன்.. சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்த பீலா சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து டாக்டர் ஆனார். அதன் பின் ஐஏஎஸ் படித்து அதிலும் தேர்ச்சி பெற்றார். செங்கல்பட்டு துணை ஆட்சியராக தனது பணியைத் தொடங்கியவர், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றினார்.
அதன் பிறகு செங்கப்பட்டு மாவட்டத்தின் துணை ஆட்சியராகவும், மீன்வளத்துறை இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார். மத்திய ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இயக்குநராகவும் பணியாற்றினார். 2019-ம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறைச் செயலாளாராக அவர் பணியாற்றியபோது கொரோனா பெருந்தொற்று அதிகளவில் பரவி வந்தது. அந்த சமயம் கொரோனா பாதிப்புகள், உயிரிழப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு தீவிரமாக செயல்பட்டவர். இதனால் மக்களிடையே நன்கு அறியப்பட்டவர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பிஹார், ஜார்கண்ட் மாநிலங்களிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணிபுரிந்திருக்கிறார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றிய அவர் தற்போது தமிழ்நாடு அரசின் எரி சக்தி துறை செயலாளாராக பணியாற்றி வந்தார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த இரு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தனது 55வது வயதில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்திருக்கிறார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.