தமிழ்நாடு

வரதட்சணை கொடுமை: ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

kaleelrahman

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவருக்கும் கீழக்கரை வங்கியில் பணிபுரியும் ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்த நிலையில், ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது 15 பவுன் நகையும் ஒரு லட்சம் ரூபாய் பணமும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கூடுதலாக 5 லட்சம் வரதட்சணை கேட்டு, கணவர் ரமேஷ் கொடுமைப்படுத்தியதோடு வீட்டை விட்டு விரட்டியதாகவும் இது குறித்து கீழக்கரை காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தும், புகாரின் மீது அதிகாரிகளோ காவல்துறையினரோ எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த உமா மகேஸ்வரி, தனது கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி தீப்பெட்டியை பறித்து அவரை தற்கொலையில் இருந்து காப்பாற்றினர் அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து அவரிடமிருந்த மண்ணெண்ணைய் கேனை பறித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.