தமிழ்நாடு

திருவள்ளூர்: நண்பர்களுக்கு இடையில் முற்றிய வாக்குவாதம் - இரட்டை கொலையில் முடிந்த சோகம்

kaleelrahman

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே வாலிபர்கள் இருவரை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்துள்ள ஆர்.கே.பேட்டை வெடியங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவாஜி என்பவரின் மகன் பிரதாப் (23). புதூர்மேட்டை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் சஞ்சய் (18), தனஞ்செயன் என்பவரின் மகன் பிரசாந்த் (19), வெங்கடேசன் என்பவரின் மகன் பரத்ராஜ் (19) ஆகிய 4 பேரும் நண்பர்கள்.

இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை புதூர்மேடு வார சந்தைக்கு அருகில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சஞ்சய் தான் கையில் வைத்திருந்த கத்தியால் பிரதாப்பை குத்தியதாகவும், தடுக்க முயன்ற பிரசாந்த்தையும் குத்தியதில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரதாப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பட்டப்பகலில் பொதுமக்கள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்தர் குமார். சஞ்சய், பரத்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று கூறி கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,சோளிங்கர் சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருத்தணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன், ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்தர் குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.